சனி, 26 ஜூலை, 2014

பெயரெச்சம், வினையெச்சம்

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கம் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
         பெயரெச்சம், வினையெச்சம் - இலக்கண குறிப்பறிதல்


1. பெயரெச்சம்:

ஒரு வினைச் சொல்லானது பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும்.

(எ.கா) படித்த மாணவன், வந்த வாகனம், தந்த பணம், கண்ட கனவு, சென்ற நாட்கள்

மேற்கணடவற்றுள் படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும்.

பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

படித்த மாணவன், வந்த வாகனம், தந்த பணம், கண்ட கனவு, சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால். நீங்கள் முதலில் உள்ள படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவற்றை கணக்கிட்டு தான் பெயரெச்சம் என எண்ண வேண்டும்.

முதலில் படித்த, வந்த, சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள 'அ' என்னும் சத்தத்தோடு முடியும்..

விளக்கம்:

படித்த- இதன் கடைசி எழுத்து 'த'

'த' என்ற எழுத்தை பிரித்தால் த்+அ என்று பிரியும்..

இப்படி வார்த்தையின் இறுதியில் 'அ' என்னும் சத்தம் ஒலித்தால் அது பெயரெச்சம்தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

பெயரெச்சத்தின் வகைகள்:

அ.தெரிநிலைப்பெயரெச்சம் ஆ.குறிப்புப்பெயரெச்சம்
இ.எதிர்மறைப்பெயரெச்சம் ஈ.ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம்
என 4 வகைப்படும்.

அ.தெரிநிலைப்பெயரெச்சம்
காலத்தை வெளிப்படையாகக் காட்டி, அச்சொல் முடியாமல் நின்று, பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிந்தால் அது தெரிநிலைப்பெயரெச்சமாகும். இது மூன்றுகாலங்களிலும் வரும்.

(எ.கா) படித்த மாணவன்
படிக்கின்ற மாணவன்
படிக்கும் மாணவன்

ஆ.குறிப்புப்பெயரெச்சம்

காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஒரு செயலை உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லாக முடிந்தால் அதுவே குறிப்புபெயரெச்சம் எனப்படுகிறது.

(எ.கா.)நல்ல பையன்
கரிய உருவம்

இ.எதிர்மறைப்பெயரெச்சம்

(எ.கா.) பாடாத பைங்கிளி
கேட்காத செவி
பேசாத பெண்

சொற்களை வாசித்தாலே எதிர்மறை என எளிதாக அறியலாம்.

ஈ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈற்றெழுத்து கெட்டுவரும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகும். “ஆ” எனும் விகுதியில் முடியும்.

(எ.கா.) பாடா பைங்கிளி
பொய்யா மொழி
வாடா மலர்
பேசா வாய்
சிந்தா மணி
மாறா அன்பு
செல்லா காசு
தேரா மன்னா

2. வினையெச்சம்:

தொழிலையும் காலத்தையும் உணர்த்தி வினயைக் கொண்டு முடியும் சொல் வினைச்சொல் ஆகும்.

(எ.கா) படித்து முடித்தான், வந்து சென்றான், ஓடி மறைந்தான், பாடி முடித்தான், சென்று வந்தான்.

மேற்கணடவற்றுள் படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும்.

வினையெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

படித்து முடித்தான், வந்து சென்றான், ஓடி மறைந்தான், பாடி முடித்தான், சென்று வந்தான் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று வினா வரும்போது முதலில் உள்ள படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவற்றை கணக்கிட்டுதான் அவைவினையெச்சம் என எண்ண வேண்டும்.

முதலில் படித்து, வந்து, சென்று போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள 'உ' என்னும் சத்தத்தோடு முடியும்.

விளக்கம்:

படித்து - இதன் கடைசி எழுத்து 'து'

'து' என்ற எழுத்தை பிரித்தால் த்+உ என்று பிரியும்..
பாடி, ஆடி, ஓடி என்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள் 'இ' சத்தத்தில் முடியும்.

விளக்கம்:

பாடி- இதன் கடைசி எழுத்து 'டி'

'டி' என்ற எழுத்தைப் பிரித்தால் ட்+இ என்று பிரியும்.


இப்படி வார்த்தையின் இறுதியில் 'உ' மற்றும் 'இ' என்னும் சத்தம் ஒலித்தால் அது வினையெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

(அ) தெரிநிலை வினையெச்சம்
(ஆ) குறிப்பு வினையெச்சம்

என வினையெச்சம் 2 வகைப்படும்.

அ.தெரிநிலை வினையெச்சம்

தெரிநிலை வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டி வினைச் சொல்லைக் கொண்டு முடியும்.

(எ.கா) வந்து போனான்
நின்று வந்தான்

ஆ.குறிப்புவினையெச்சம்

குறிப்பு வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டாமல் பண்பின் அடிப்படையில் வினைச் சொல்லைக் கொண்டு முடியும்.

(எ.கா)மெல்ல நடந்தான்
கோபமாக பேசினான்

3. முற்றெச்சம்
ஒரு வினைமுற்று சொல் தன்னுடைய வினைமுற்று பொருளை தராமல். வினையெச்ச பொருளைத் தருமாயின் அதற்கு “முற்றெச்சம்” என்றுபெயர். இச்சொல் தனித்து நோக்கும் போது வினைமுற்றாகத் தோன்றும். இரண்டு வினைமுற்று தொடர்ந்து வருமாயின் அது முற்றெச்சம் ஆகிறது.
(எ.கா)
சிறுவர் பாடினர் மகிழ்ந்தனர்
படித்தனர் தேர்ந்தனர்
எழுதினன் முடித்தனன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக