மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!”
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்றுதான் இன்றும்
பாடிக்கொண்டிருந்திருக்கும் வார்க்கத்தின் ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும்
இன்றும் நிறைந்திருக்கும். பழக்காலத்திலிருந்தே தொடர்ந்துவந்த பெண்
சமுதாயத்தின் மீதான அடக்குமுறைகளும் குற்றங்களும் சில புரட்சிக்குரல்களால்
களையப்பட்டாலும் காலத்திற்கு ஏற்றபடியான புதிதுபுதிதான அநீதிகள் பெண்கள்
மீது திணிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. தேவதாசி முறையும்,
உடன்கட்டை முறையும் தீர்ந்ததென பெருமூச்சு விட்ட மறுபொழுதே வரதட்சணைக்
கொடுமை முதலாக பெண் சிசுக்கொலை மற்றும் ஈவ்டீசிங் எனப்படும் பெண்கள் மீதான
கேலிப்பிரச்சினை ஈறாக எத்தனை புதிய பிரச்சினைகள்.
பெண்ணை கொண்டே
பெண்ணை அழிக்கும் வித்தை. இதுதான் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில்
அடியெடுத்து வைத்திருக்கும் இந்த மனித சமுதாயத்தின் பெண்ணினத்தின் மீதான
புதிய சாதனை. நாகரிக வளர்ச்சியில் இந்த கொடுமைகள் இன்று கொஞ்சம் மறைவது
போல் தோன்றினாலும் காலத்திற்கு ஏற்றபடி பெண்ணினத்தின் மீதான புதிய
பிரச்சினைகள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எப்பொழுதுமே இந்தெ
பெண்குலத்தின் மீதான அடக்குமுறைகளும் அநீதிகளும் வேரறுக்கப்படுவதில்லை.
காலத்திற்கேற்ப புதியதாய் அவதாரம் எடுக்கின்றன.
பொதுவாகவே இந்த
சமூகம் 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்' என சொல்லி
பெருமைப்பட்டுக்கொள்ளும். எனக்கென்னவோ இந்த வாக்கியம் கேட்கும்
பொழுதெல்லாம் பெண்ணின் வெற்றியை ஆண்கள் தட்டிப்பறித்து
பெருமைப்பட்டுக்கொள்வதாக தோன்றும். அதென்ன வெற்றிக்கு பின்னால்?, அதாவது,
வெற்றி ஆணுக்குத்தான் வேண்டும். ஆனால் அதற்கு சொந்தக்காரி அந்த ஆணுக்குப்
பின் நிற்க வேண்டும் என்பதா அதன் உட்கருத்து? வேண்டுமென்றால் பெண்ணையும்
சமமாய் பாவித்து ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருந்து
பார்க்கட்டுமே. என்னே இந்த சமுதாயத்தின் சாதுர்யம்! இப்பொழுது நீங்கள் கூட
இந்த சமுதாயத்தின் சாதுர்யம் கண்டு வியக்கலாம். ஆச்சரியபடுவதற்கில்லை.
இந்த சமுதாயத்தில் ஒரு சராசரி மனிதனின் அன்புக்கும் பாசத்திற்கும்
முதன்மையான ஆன்மாவாக, தாயாக ஒரு பெண் வேண்டும். காதலும் காமமும் பகிர்ந்து
இனிமையான வாழ்க்கைக்கு மனைவியாக ஒரு பெண் வேண்டும். இரண்டாம் பாதி
வாழ்க்கையின் காரணமாகவும் மகனை விடவும் அதிக பாசம் பொழியவும் மகளாக ஒரு
பெண் வேண்டும்.
ஆனால் அந்த பெண் தனக்கு சரிநிகராக மட்டும் இருந்துவிடகூடாது என்பதில் தான் என்ன நியாயம் இருக்க முடியும்?
உங்களில் யாரேனும் சொல்லக்கூடும், பெண்கள்தான் இன்று அனைத்து துறைகளிலுமே
கால் பதித்து விட்டார்களே. பெண்ணுரிமை கிடைத்தாயிற்றே என. நான்
இல்லையென்றும் சொல்லவில்லை.
ஆனால் நாடே இமாலய உயரம்
ஏறவேண்டியிருக்கவேண்டிய பட்சத்தில் அவர்கள் ஏறியிருப்பது முதல் சில படிகளே
என்றுதான் சொல்கிறேன். இன்றுவரை ஒரு இந்திராகாந்தி, ஒரு கல்பனா சாவ்லா என
ஒருசிலர் தானே கண்களுக்கு தென்படுகிறார்கள்.
இன்றும் வேலைக்குச்
செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் சம்பள கவரை பிரிக்காமலே கணவனிடம்
கொடுக்கும் மனைவிமார்கள். சென்ற தலைமுறையில் வாழ்ந்த என் உறவினர்
ஒருவருக்கு அவரது சம்பளம் எவ்வளவு என்றே தெரியாது.
அப்படியே கணவர்
வாங்கிக்கொள்வார். இன்றும் தனது ஆசிரிய மனைவியின் சம்பளத்தில் குடும்பம்
நடத்த, வீட்டில் சும்மாவே முடங்கிகொடக்கும் கணவர் எங்கள் அண்டை வீட்டிலே
உண்டு. இதை பெண்ணுரிமையென எப்படி சொல்ல இயலும்?
இன்றைய சமுதாயத்தின்
பெண்ணினமே! ஒவ்வொரு முறையும் உங்களுக்கு குரல்கொடுக்க ஏன் மற்றவர்களைத்
தேடுகிறீர்கள். ஆமைபோல் ஆண்களின் அதிகார ஓட்டுக்குள் இன்னும் எத்தனை காலம்
அடங்கியே இருக்கப்போகிறீர்கள்? நீங்கள் அடங்கியே இருப்பதால்தான் இந்த
சமுதாயமும் உங்களை நகர அனுமதிக்காத பொழுதுகளில் எல்லாம் எளிதாக
கழித்துப்போட்டுவிடுகிறது.
உலகின் இன்னும் படிக்கப்படாத பக்கங்கள்
எத்தனையோ இருக்க, இன்னும் அழும் தொடர்கள் தானே உங்கள் ''மாலை''களை
விழுங்கிக்கொண்டிருக்கின்றன.
உலகின் அனைத்திலுமே உங்களுக்கும் சம
உரிமை உண்டெனெ முதலில் உணர்ந்திடுங்கள். வீடும் அலுவலகமும் தவிர உலகில்
இருக்கும் அனைத்தையும் எப்பொழுது
கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?
அடங்கிகிடப்பதும் முடங்கிகிடப்பதுவுமா கலாச்சாரம்? சுய ஒழுக்கத்துடனான
யாவரும் தொடுவானம் சென்றுவர உரிமையுண்டு. புதுமைப்பெண்களாய் வீறுகொண்டு
நடங்கள். இயற்கைகூட உன் திறமை அறிந்துதான் சமூக வளர்ச்சிக்கான பெரும்
பொறுப்பான தாய்மையை பெண்களுக்கு கொடுத்துள்ளது.
பெண் சுதந்திரம்
என்றும் ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக இருக்கட்டும். மென்மையும், நளினமும்,
பணிவும், அடக்கமும் பெண்மைக்கு உரிய பண்புகள். என்றும் அவற்றைப் பேணிக்
காப்போம்.
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களைச் சீராக்குவோம்!
பதிவு
- நவீன் கிருஷ்ணன்
( மனிதன் )