அன்பு வாசகர்கள் அனைவரையும் எழுத்தோசை வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சிறுகதை எழுதுவதற்கான குறிப்புகளை இந்த பக்கத்தில் அறிவோம் வாங்க...
தேவமைந்தன்
இன்றைக்குச் சிறுகதை தமிழுலகில் எத்தனையோ தொலைவு பயணம் செய்து வடிவமிழந்து உருவமிழந்து அன்னியமாகி சிறுத்து பயிற்சிப் பட்டறைகளில் சான்றிதழ் மட்டுமே பெறும் அளவு 'மவுசு' குறைந்து தனக்கான அடையாளம் தேடி அலைகிறது. தமிழருக்குக் கரும்பு போலவும்(சீனா) மிளகாய் போலவும்(சிலி) மணிலாப் பயறு போலவும்(மணிலா) மெய்யாகவே அன்னியமான சிறுகதையின் உரைநடை வடிவம் இலக்கிய உலகில் புகுந்து எப்படியெல்லாம் இலக்கணப்படுத்தப்பட்டது என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். எந்த அளவு முன்னோக்கித் தொலைநோக்க முடியுமோ அதே அளவு சரியாகப் பின்னோக்கித் தொலைநோக்கவும் சிங்கத்துக்கு மட்டுமே முடியுமா. இதற்கு 'அரிமா நோக்கு' என்று பெயரிட்டு, தமிழ் உரையாசிரியர்கள் தம் உத்திகளுள் இதைத் தலையாய உத்தியாக ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே கொண்டார்கள். இந்த உத்தியின் ஒரு பாதியை இந்தக் கட்டுரையில் பயன்படுத்துகிறேன். தமிழுக்குப் புதுவரவாக இருந்த சிறுகதைக் குழந்தை, யார் யார் மடிகளிலெல்லாம் தவழ்ந்து ஆனது, மறக்கப்பட்டுவிட்ட/மறக்கடிக்கப்பட்ட அவர்கள் யார் என்பதைக் குறிக்கும். கூடுமான அளவு ஒழுங்குடன் வெளிப்படுத்துவதும் இதன் அடுத்த நோக்கம்.
காவியங்களில் சிறுகதைகள் – டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு:
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், கவுந்தியடிகள் மாதரிக்குக் கூறிய அடைக்கலச் சிறப்புப் பற்றிய வணிகமாதின் கதை, செய்யுளில் அமைந்த சிறுகதை. மதுராபதி தெய்வம் கண்ணகிக்குக் கூறிய பொற்கைப் பாண்டியன் கதையும் சிறுகதையே ஆகும். இங்ஙனமே மணிமேகலை என்னும் காவியத்தில் கூறப்பட்டுள்ள சுதமதியின் வரலாறு, ஆபுத்திரன் வரலாறு ஆகியவற்றில் சிறுகதை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இவற்றை விரித்து உரைநடையில் எழுதினால் அவை இலக்கிய நயமுள்ள சிறுகதைகளாக உருவெடுக்கும். இவ்வாறே கொங்குவேள் பாடிய பெருங்கதையிலும் சீவக சிந்தாமணியிலும் சிறுகதைகள் பல செருகப் பெற்றுள்ளன. ஆயினும் இவை அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன.(1)
தொடக்க காலத்தில் சிறுகதைகள் – டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாளிதழ்களும், கிழமை திங்கள் இதழ்களும் பெருகத் தொடங்கிய பொழுது, மேநாட்டுச் சிறுகதைகளைப் பின்பற்றி நம்மவர் தமிழில் சிறுகதைகளை எழுதலாயினர். பண்டித நடேச சாஸ்திரியார் (1859-1906) 'ஈசாப் கதைகள்,' 'தக்காணத்து பூர்வ கதைகள்,' 'தக்காணத்து மத்திய காலக் கதைகள்' என்ற மூன்று கதை நூல்களை எழுதினார். இந்த நூற்றாண்டில் பேராசிரியர் செல்வக்கேசவராய முதலியார் எழுதிய 'அபிநவ கதைகள்' காலத்தால் முற்பட்டவை என்றும், அறிஞர் வ.வே.சு. ஐயர் அவர்கள் பாலபாரதியில் எழுதிய கதைகள் சிறுகதைகளுக்கு உயிரும் ஒளியும் கொடுத்தன என்றும் புதுமைப்பித்தன் எழுதியுள்ளார்.
கவியரசர் பாரதியாரும், இராமாநுசலு நாயடு என்பவரும் சிறுகதைகள் எழுதினர். 1930க்குப் பின்பு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். எஸ்.வி.வி., கொனஷ்டை, ஆகியோர் நகைச்சுவை பொருந்திய சிறுகதைகளை வரைந்து பெயர் பெற்றனர். திருவாளர்கள் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பி.எஸ்.ராமையா, சிதம்பரம் சுப்பிரமணியன், புதுமைப்பித்தன் ஆகியோரும் சுவை மிகுந்த சிறுகதைகளை எழுதலாயினர், மௌனி என்பவர் எழுதியுள்ள 'நட்சத்திரக் குழந்தைகள்,”சிவசைவம், 'எங்கிருந்தோ வந்தான்' போன்ற கதைகள் உயர்ந்தவை….வை.மு.கோதைநாயகி அம்மையார் எழுதியுள்ள சிறுகதைகள் – 'மூன்று வைரங்கள்,' 'கதம்ப மாலை,' 'பட்சமாலிகா,' 'சுடர் விளக்கு,' 'பெண் தர்மம்' ஆகிய ஐந்து [தொகுப்பு] நூல்களாக வெளிவந்துள்ளன.
வாழ்க்கை நிகழ்ச்சிகளில் ஒன்றை மட்டும் எடுத்து, அதற்கு முதல்-இடை-கடை என்னும் மூன்று உறுப்புகளை அமைத்து, விளங்க வரைவது சிறுகதை குறுங்கதை எனலாம். சுருங்கக் கூறின், பெருங்கதை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நிலைக் கண்ணாடி எனலாம்.
புதுமைப்பித்தனுடைய சிறுகதைகளில் பல சிறந்த உண்மைகள் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டனைக் கீழே காண்க:
(அ) “பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம்; ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், 'குற்றம் செய்கின்றாய்' என்று தண்டிக்க வருகின்றது. இதுதான் சமூகம்.”
(ஆ) “உணர்ச்சி, தேவனையும் மிருகமாக்கி விடுகிறது.”(2)
விடுதலைப் போராட்டப் பின்னணி – கல்கியின் சிறுகதைச் சாதனை – கா.திரவியம் நோக்கு:
கல்கியின் சிறுகதைகள் தேசியத்துக்கு ஆற்றிய சிறப்பான தொண்டு, அக்கதைகள் பலவற்றில், நாட்டுப்பற்றும் நாட்டுக்கு ஆக்கம் தேடிய நல்ல கருத்துக்களும் கதையில் இழையோடியதாகும். சிறை சென்ற தேசபக்தனைக் கதாநாயகனாகவும், சமூகசேவை ஆற்றும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு பின்னப்பட்ட இக்கதைகள், தியாகிகளையும் ஊழியர்களையும் நம் கண்முன் நிறுத்தி, அவர்கள் தொண்டினாலும் துன்பங்களினாலும் ஊழியத்தினாலும் உள்ளக் கிளர்ச்சிகளாலும் படிப்பவர்களை ஆட்கொண்டனர். அரசின் அடக்குமுறைக்கும், பொதுவாகப் பலரின் அலட்சியத்துக்கும் ஆளாகியிருந்த இந்த வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தம் கதைகள் மூலம் சமூகத்தின் ஏற்பையும் பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது, கல்கியின் சிறந்த சாதனைகளில் ஒன்று.(3)
விடுதலைப் போராட்டப் பின்னணி – அகிலனின் சிறுகதைச் சாதனை – கா.திரவியம் நோக்கு:
விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளில், போராட்ட உணர்ச்சி பொங்கி வழிகிறது அகிலனின் 'பொங்குமாங்கடல்' என்ற கதை. சிதம்பரம் பிள்ளையைச் சிறையிலே தள்ளி செக்கிழுக்க வைத்த ஆங்கிலேய அதிகாரிகளைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த புரட்சிவாதிகளை மையமாகக் கொண்டு நெய்யப்பட்ட நெஞ்சை அள்ளும் கதை இது.(4)
முதன்முதலில் தமிழில் சிறுகதை குறித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடன் சிந்தித்தெழுதிய டாக்டர் அ. சிதம்பரநாதன் கருத்துகள் :
“தமிழில் சிறுகதையைப் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தோடு சிந்தித்து, தரம் அறிந்து வகைப்படுத்தித் திறனாய்வு செய்த முதல் தமிழ்ப் பேரறிஞர் இவரே” என்று, “தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்”(ஏப்ரல் 1977) என்ற அரிய சிறு அளவிலான புத்தகத்தைப் பதிப்பித்த பேரா.புளோரம்மாள், ம.செ.இரபிசிங் கூறியுள்ளனர்.(5) 22+vi பக்கங்கள்; ரூபா ஒன்று மட்டுமே விலையுள்ளது இந்நூல். இது [இக்கட்டுரை எழுதும்] இப்பொழுது கிடைப்பதில்லை. மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் அ.சிதம்பரநாதன் ஆற்றிய பொழிவின் சுருக்கமும், இலக்கிய இதழ்களில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள சில முதன்மைக் கருத்துகளை – கூடுமானவரை சிதம்பரநாதனின் நடையிலேயே தருகிறேன். அந்தப் பகுதிகளில் மட்டும் காலம் வேறுபட்டிருக்கும்.
எட்கர் ஆலன் போ, ஹென்றி ஹட்சன், பெயின்(Barry Paine) ஆகியோர் கூறும் சிறுகதை இலக்கணம்:
1. சிறுகதை என்பது உட்கார்ந்து ஒரே மூச்சிலேயே படித்துவிடக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
2. 2000 அல்லது 3000 சொற்களுக்குமேல் போவதாக இருக்கக்கூடாது.
3. அரை மணி அல்லது ஒரு மணிக்குமேல் படிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளக் கூடியதல்லாததாக இருக்கவேண்டும்.
அளவு ஒன்றே சிறுகதைக்கு இலக்கணம் அல்லாவிட்டாலும், அளவும் சிறுகதையின் இலக்கணங்களுள் ஒன்றாகும்.
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'குமுதினி' என்னும் கதை 300 பக்கமாயினும் அது சிறுகதைதான் என்று வாதிப்பார் உண்டு. ஆங்கிலத்திலும் மெரிடித் என்பார் எழுதிய 'குலோவின் கதை'(Tale of Chloe) என்பது சிறுகதைதானா என்ற செய்தி பற்றி இன்று ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.
சிறுகதை எழுத்தாளர்கள் சிக்கலான பெரிய செய்திகளைப் பொருளாக எடுத்துக் கொள்ளக் கூடாது.(“They should not saddle himself with a complexed plot.” Paine P.38) ஆடுகின்ற பெண் ஒருத்தி தான் ஆடுகின்ற அரங்கத்தின் நீள அகலத்திற்கேற்ப தனது ஆட்டங்களைச் சுருக்கிக்கொள்ளுதல் போல, சிறுகதை ஆசிரியர்கள் தம்முடைய கதைப்பொருளைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.
சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவும்தான் எதிர்பார்க்கப்படுகின்றன.(“Singleness of aim and singleness of effect are the two great canons by which we have to try the value of a short story – as a piece of art.” Henry Hudson, Introduction To The Study Of Literature, P.445) நோக்கம் நிறைவேறும் வகையில் சிறுகதை அமைந்திருத்தல் போதுமானது. பல எழுத்தாளர்களுக்கு இது கைவரப்பெறாததால்தான் புதினங்களை[நாவல்களை] எழுதத் தலைப்புகள் என்று சொல்வது தவறாகமாட்டாது.
சிறுகதை எழுதுபவர்கள், கதை பொய் என்ற உணர்ச்சி வாசகர்கள் இடத்தில் உண்டாகும்படி எழுதுவார்களேயானால், அக்கதையில் பல நன்மைகள் உண்டு. என்றாலும் அவை முழுப்பயன் அளித்தல் இல்லை.(“ஒருமுறை ஒரு கதை பொய்யென்று உணர்ந்தால், எல்லா அறங்களும் பயனில்லை”) மெழுகுவர்த்தி பார்ப்பதற்கு அழகாகவும் தொடரவும் அது எரியவில்லை என்றால், எவ்வாறு தக்க பயன் விளைச்சல் இல்லையோ அவ்வாறே மெய்போன்றது என்ற உணர்ச்சியை எழுப்பாத சிறுகதை முழுப்பயன் தராது என்பது நம்பிக்கை.
சிறுகதை எழுதுபவர்களைப் பற்றிய நிகழ்ச்சி படர்க்கையில் வைத்துத் தெரிவிக்கலாம்; கதைத் தலைவனோ கதைத் தலைவியோ தானே பேசுவதுபோல அமைக்கவும் செய்யலாம்; கடிதங்கள் மூலமோ, நாட்குறிப்புகள் மூலமோ, பிற பாத்திரங்கள் மூலமோ ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்கள் வெளிப்படுமாறு செய்யலாம். இந்த மூன்று வகைகளில் எதனை வேண்டுமானாலும் சிறுகதை ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம் என்பது மரபு.
சிறுகதையில் உரையாடல் இருப்பது விரும்பத்தக்கது என்றாலும்.இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சிலருடைய சிறுகதை உரையாடலே இல்லாமல் நிகழ்தல் கூடும்; சிலருடைய சிறுகதையிற் சிறிதளவு உரையாடல் இருத்தல் கூடும்; சிலருடைய சிறுகதையில் எல்லாம் உரையாடலாகவே அமைந்துவிடுதலும் உண்டு.
சிறுகதையின் தொடக்க வாக்கியங்களைப் படித்த அளவில் கதையின் நோக்கம் இன்று என்று வாசகருக்குப் புலப்பட்டுவிட வேண்டும்.(“ Initial sentences should bring out the aim.”-WHHudson)
சிறுகதையின் முடிவு எவ்வாறிருக்க வேண்டும்? இன்பியல் முடிவினாலோ துன்பியல் முடிவினாலோ கலை அழகு பெற்றுவிடாது; கலையழகிற்கு மற்ற பல காரணங்கள் உண்டு.(“மகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் கலையுடன் எந்த தொடர்பும் இல்லை; கலை முடிவு சரியானது மற்றும் தவிர்க்க முடியாத முடிவு.” – பெயின்)
அ.சிதம்பரநாதன் 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்'(1977)நூலில் சுட்டுள்ள சிறுகதை ஆசிரியர்களும் அவர்கள் படைத்த சிறுகதைகளும்:
1921வரை வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார்தான் சிறுகதை எழுத்தாளர்களுக்கு விடிவெள்ளி யாய் இருந்தவர்.. அவர் இயற்றிய 'திண்டிம சாஸ்திரி,' 'சுவர்ண குமாரி' போன்றவற்றின் அடிப்படையில் சிறுகதைகள் எழுந்துள்ளன. வேதநாயகம் பிள்ளை, வ.வே.சு.ஐயர், மறைமலையடிகள் போன்றவர்களும் சிறுகதை போன்ற சிலவற்றை எழுதியுள்ளார்கள்...
சரியான சிறுகதை இலக்கியத்தின் தந்தையாகத் தமிழில் மதிக்கத்தக்கவர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி என்று கூறுவது பொருத்தமற்றதாகாது. அவருடைய சிறுகதைகளிற் சில நெடுங்கதைகளாக இருக்கின்றன..அவரோடு சமகாலத்திலே வேறு இரு பெரும் எழுத்தாளர்கள் தோன்றினர். கு.ப.இராசகோபாலனும் புதுமைப்பித்தன் என்ற சொ.விருத்தாசலமும் நம் சந்ததியாராலும் விரும்பிப் படிக்கத்தக்க அளவு சிறப்பும் ஆற்றலும் பெற்ற சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரும் காலஞ் சென்றுவிட்டனர். புதுமைப்பித்தன், உலகச் சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்…அவர் மிக்க சுருக்கமாகவும், திட்பமாகவும் எழுதுதலில் வல்லவர்; வரிதோறும் தோனிப் பொருளோடு வரையும் பெற்றி படைத்தவர். கு.ப.இராசகோபாலன், உயிரோடு திகழ்வாரைப் போலப் பல பாத்திரங்களைத் தமது கதைகளில் கொடுத்துள்ளார். சாதாரணமாக நம்மால் ஒதுக்கிவிடப்படுகிற, நம் கண்ணுக்குத் தெரியாது போய்விடக் கூடிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு அவர் கதைகளை எழுப்பியுள்ளார். அவர் சொல்லாட்சி ஒரு தனிமதிப்புடையது. சில சொற்களில் அடங்கிக் கிடக்கும் பொருள் விரித்தால் அகன்று காட்டும். 'காணாமலே காதல்' 'புனர்ஜென்மம்' 'கனகாம்பரம்' முதலிய அவருடைய சிறுகதைத் தொகுதிகளாலன்றியும், 'இரட்டை மனிதன்' போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களாலும் அவர் புகழ் பெற்றார். நிலவும் என்பது உறுதி. சமூக நோக்கில் ஜீவா* எழுதிய சிறுகதைகள், 'வேதாந்த கேசரி' 'பிரதிவாதி பயங்கரம்' முதலியவை. விந்தனின் 'பொன்னி' முதலிய சிறுகதைகள் சமூகப் பார்வையில் அமைந்தவை. கணையாழி எழுதிய 'நொண்டிக் குருவி' வெளியே ஜீவகாருண்யம் பேசி வீட்டில் அதைப் பின்பற்றாதவரை அம்பலப் படுத்தியது. “யார் குற்றவாளி?” என்ற கருத்தோடு எழுதப்படும் கதைகள் பல. இராசகோபாலாச்சாரியார் எழுதிய 'பட்டாசு,' அண்ணாதுரை எழுதிய 'குற்றவாளி யார்?,' புதுமைப்பித்தன் எழுதிய 'பொன்னகரம்,' ஜீவா எழுதிய 'கொலு பொம்மை' ஆகிய கதைகளில் வரும் பாத்திரங்கள் திருடியதாகவோ, விபச்சாரம் செய்ததாகவோ இருந்தன. அதற்குக் காரணம் அவ்வாறு அவர்களைச் செய்யும்படி பாழான ஏழ்மை நிலையில் விட்டுவிட்ட சமுதாயமே காட்டப்படுகிறது.
புதுமெருகு பெற்ற பழங்கதைகள்:
கு.ப.ரா. எழுதிய 'துரோகமா?,' கருணாநிதி எழுதிய 'ராயசம் வெங்கண்ணா' ஆகிய சிறுகதைகள், தஞ்சாவூர் – நாயக்கர்களிடமிருந்து மராத்தியர் கைக்குப் போகும்படி ஏற்பட்ட சரித்திரம் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டவை. அவ்விரு ஆசிரியர்களும் நிகழ்ச்சியை வெவ்வேறு கோணத்தில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். புஷ்பத்துறை சுப்பிரமணியன் அஜாத சத்ருவைப் 'பாடலி' என்ற கதையைத் திரும்பவும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். 'கொனஷ்டை' எழுதிய கதைகளில் மகனுக்கு முதுமையைக் கொடுத்து இளமையைத் தான் பெற்றுக் கொண்ட யயாதி ஒரே நாளில் பட்ட அல்லல்கள், ஆயிரம் ஆண்டுகளில் படுவதோடு சமம் என்ற அரிய கருத்து காட்டப்பட்டது. 'அகல்யை' என்ற புதுமைப்பித்தன் கதை புத்துருவமே பெற்று நிற்கிறது.
கதையாசிரியர்களின் வாழ்க்கை நிலையை வைத்து எழுதப்பட்ட கதைகள்:
சுண்டு எழுதிய 'சன்னியாசம்' என்ற சிறுகதை, தன்னால் காதலிக்கப்பட்ட பெண்ணொருத்தியைத் திரைப்பட முதலாளியொருவர் தன் ஆசை நாயகியாக ஆக்கிக்கொண்டுவிட்டபடியால் எவ்வாறு படத்திலாவது சந்நியாசியாகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. விந்தன் தனக்கேயுரிய பாணியில், தமிழ்நாட்டில் தம் பெருமை அறியப்படாத கதாசிரியர் ஒருவர் வடநாடு சென்று அங்கிருந்துகொண்டு 'வக்ரநாத்ஜி' என்ற புனைபெயரில் கதைகளெழுதித் தமிழ்நாட்டில் புகழும் செல்வமும் பெற்றார் என்பதைச் சித்தரித்தார்.
ஆண்-பெண்களின் மனநிலையை நன்றாக கவனித்து உணர்ந்து எழுதிய சிறுகதை ஆசிரியர்கள் -அரு.இராமநாதன்('காதல்' இதழ்க் கதைகள்), டி.கே.சீனிவாசன்('துன்பக்) கதை') ஆகியோர். பெண்களின் மனநிலையை நுட்பமாக அறிந்துணர்ந்து, தெளிந்த உணர்த்தலோடு எழுதியவர் லக்ஷ்மி(திரிபுரசுந்தரி). அவர் எழுதிய 'விசித்திரப் பெண்கள்,' 'முதல் வகுப்பு டிக்கெட்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஏழைத் தொழிலாளர்களின் மனநிலையை நன்கு உணர்ந்து எழுதியவர், தானும் தொழிலாளராய் இருந்து எழுத்தாளரான விந்தன். பெ.தூரன்,மு.வரதராசன், ராஜம் கிருஷ்ணன்('பிஞ்சு மனம்'), கி.வா.ஜகந்நாதன்('பவள மல்லிகை')ஆகியோரையும் இவருடன் குறிப்பிடலாம்.
கலைஞர் சிலருடைய முக்கிய விருப்பத்திற்குப் பாத்திரமாக இருப்பவர் கண்முன்னே இல்லாமல் மறைந்து விட்டால், அவருடைய கலைத்திறன் மங்கிவிடுகிறது ஜீவாவின் 'பிடில் நாதப்பிரமம்', புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் 'ஜீவ சிலை' போன்ற சிறுகதைகள் வெளிப்படுத்தின.
சினிமாப்பட முதலாளிகளும் டைரக்டர்களும் தரும் தொல்லைகளை ஜீவாவின் 'மிருநாளினி,' கல்கியின் 'சுண்டுவின் சந்நியாசம்' புலப்படுத்தின.
சீர்திருத்த நோக்கில் படைக்கப்பட்ட சிறுகதைகள்:
கல்கியின் 'விஷ மந்திரம்' தீண்டாமையைப் பொசுக்கிவிடும் வகையில் அமைந்தது.
காசி நகரப் பண்டங்களுக்கு இக்கதையை மொழி பெயர்த்துக் காட்டுதல் வேண்டும். ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய 'வான் மலர்' என்னும் கதை, விதவை மறுமணத்தைப் பற்றியது. இது தொடர்பாக, இதைவிட மிகச் சிறந்தது புதுமைப்பித்தனுடைய 'வழி' என்ற சிறுகதை. சுத்தானந்த பாரதியாரின் 'கலிமாவின் கதை' முஸ்லிம் பக்கிரி ஒருவனின் மகள் இந்துமதம் சார்ந்தவன் ஒருவனை மணந்துகொண்டதை விவரித்தது. அண்ணாத்துரையின் 'பேரன் பெங்களூரில்' என்ற சிறுகதை, பிராமண விதவை ஒருத்தி முதலியார் குலத்து ஆசிரியரை மணந்து, ஒரு சூழ்ச்சியால், தந்தையின் ஆசியைப் பெற விழைவதுபோலக் காட்டுகிறது.
இலக்கிய மணம் வீசும் சிறுகதைகள்:
பொதுமக்கள் மதிப்புக்கு அதிகமாக ஆசைப்படாமல், தம்மை அறிந்து வாசித்து மகிழக்கூடிய மக்களுக்கு ஒத்ததாக மு.வரதராசனின் நடை அமைந்துள்ளது. அவர் எழுதிய 'விடுதலையா?' முதலிய கதைகளைக் காணலாம். 'கட்டாயம் வேண்டும்' என்ற தலைப்பிலே, வேலையின்மையும் வறுமையும் இரந்தும் பெறாமையும் எவ்வாறு ஓர் இளைஞனைத் தற்கொலைக்குத் தூண்டிவிட்டன என்ற கருத்துள்ளது. ஜீவாவின் 'முல்லை,' மகுதூம் என்பவரின் 'திருமறையின் தீர்ப்பு' ஆகிய கதைகளில் நல்ல இலக்கிய மணம் வீசக் காண்கிறோம்.
சிறுகதைகளைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாமா?
கருணாநிதி, அண்ணாத்துரை, ஏ.எஸ்.பி.ஐயர், சுத்தானந்த பாரதியார் போன்றவர்கள் சமூகக் குறைகளைப் போக்குவதன் பொருட்டு சிறுகதைகள் படைத்தார்கள். ஐரோப்பாவில் இந்நிலை நிலவியது குறித்து “தமது கதைகளைப் படிக்கும் வாசகர்களைப் பொறுத்து, விட்டுக் கொடுக்க வேண்டிய விஷயம் இது” என்று பேர்ரி பெயின் கூறினார். அண்ணாத்துரையின் “சிறுகதைகள்” என்ற தொகுப்பில் பிரச்சாரம் இடம் பெற்ற அளவு “கற்பனைச் சித்திரம்” என்ற புத்தகத்தில் இல்லை.
தொகுப்பாக…
தொகுப்பாக இறுதியில் டாக்டர் அ. சிதம்பரநாதன் குறிப்பிடும் எழுத்தாளர்களையும் அவர்களின் சிறுகதைகளையும் சுருக்கமாக இங்கே காணலாம்.
மாயாவியின் 'பனித்திரை' போன்ற கதைகள், மாணவர்களுக்கு ஏற்றதாக சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய 'சிறுகதைத் திரள்,' கா.அப்பாத்துரையார் எழுதிய 'சமூகக்' கதைகள்,' 'நாட்டுப்புறக் கதைகள்'...பி.என்.அப்புசாமி எழுதிய 'விஞ்ஞானக் கதைகள் ,' பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய 'சிறுகதைக் களஞ்சியம்' முதலியவற்றை டாக்டர். அ. சிதம்பரநாதன் இங்கே குறிப்பிடுகிறார்.
பிறமொழிச் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதில் வல்லவர்களாக – புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஆர்.வீழிநாதன், சேனாதிபதி, டி.என்.குமாரசாமி, ஏ.கே.ஜெயராமன் முதலியோரைக் குறிப்பிடுகிறார். 1946இல் எஸ்.குருசாமி 'இந்தியச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்ததைச் சிறப்பாகச் செய்தார். நினைவுகூர்கிறார்.
இலங்கை எழுத்தாளர்களில் அரியரத்தினம், வைத்திலிங்கம், சம்பந்தம், இலங்கையர்கோன் போன்றவர்களைப் பொதுவாகப் பாராட்டுகிறார்கள்.
சிறுவர்களுக்கான கதைகள் எழுதுவதில் வல்லவர்களாக – அழ.வள்ளியப்பா, அம்புலிமாமா, தமிழ்வாணன், கண்ணன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
சிறுகதை போன்ற உரைநடைச் சித்திரங்களால் வாசகர்கள் மனதில் இடம் பிடித்தவர்களாக – எஸ்.வி.வி., தூரன், சுகி, நாடோடி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
இதழ்களில் வந்த சிறந்த சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:-
- கணையாழி எழுதிய 'நொண்டிக்குருவி'
- ஜெகசிற்பியன் எழுதிய 'ஜலசமாதி'
- சோமு எழுதிய 'கடலும் கரையும்'
- ஞானாம்பாள் எழுதிய 'தம்பியும் தமையனும்'
- கே.ஆர்.கோபாலன் எழுதிய 'அன்னபூரணி'
- சோமாஸ் எழுதிய 'அவன் ஆண்மகன்'
- கெளசிகன் எழுதிய 'அடுத்த வீடு'
- எஸ்.டி.சீனிவாசன் எழுதிய 'கனிவு'
பிற மொழிகளில் மொழிபெயர்த்தேயாக வேண்டிய சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்வை:-
- கு.ப.ராஜகோபாலனின் 'காணாமலே காதல்'
- புதுமைப்பித்தனின் 'வழி'
- கல்கியின் 'விஷ மந்திரம்'
- சுத்தானந்த பாரதியாரின் 'கடிகாரச் சங்கிலி'
- அகிலனின் 'இதயச் சிறையில்'
- விந்தனின் 'முல்லைக்கொடியாள்'
- லட்சுமியின் 'வில் வண்டி'
- ஜீவாவின் 'வேதாந்த கேசரி'
- டி.கே.சீனிவாசனின் 'துன்பக் கதை'
- புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் 'ஜீவ சிலை'
- கணையாழியின் 'நொண்டிக் குருவி'
தன் காலத்தில் இதழ்களில் அடிக்கடி சிறுகதை எழுதுவோராக டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிடும் பிறர்:-
- கே.என்.சுப்பிரமணியன்
- ஜி.கெளசல்யா,
- இராதாமணாளன்
- தில்லை வில்லாளன்
- புஷ்பா மகாதேவன்
- வேங்கடலட்சுமி
- புரசு பாலகிருஷ்ணன்
- ஜி.எஸ்.பாலகிருஷ்ணன்
'தமிழில் சிறுகதைகள்' என்ற இந்தக் கட்டுரை, டாக்டர் அ.சிதம்பரநாதன் மறைந்து பத்தாண்டுகள் கழித்து 1977 ஏப்ரல் பதிப்பில் வெளியானபோதும், எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட காலம் – மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாடு நிகழ்ந்த காலம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால்தான் த.ஜெயகாந்தன் குறித்த குறிப்பு ஏதும் இக்கட்டுரையில் இல்லை. முடிவுரையில், “சிறுகதை இலக்கியம் எனப்படுவது தமிழில் அண்மையான காலத்தில்தான் எழுந்தது” என்று டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிட்டிருப்பது இதற்கு. மற்றுமோர் ஆதாரம்.
***
1967 ஜூலையில், ' தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் ' என்ற இதே தலைப்பிலானதும் – இதற்கு முற்றிலும் மாறானதோர் உணர்வெழுச்சி ஊட்டியதும் – – யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இணைத்தமிழ்ப் பேராசிரியராக அப்போது பணியாற்றிய டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியதுமான கட்டுரைத் தொகுதியைத் தமிழ்ப் புத்தகாலயம் திரு கண.முத்தையா அவர்கள் பதிப்பித்தார். இலங்கை 'தினகரன்' வாரப்பதிப்புக்கு எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. தினகரன் ஆசிரியர் திரு இ.சிவகுருநாதன், திரு செ.கணேசலிங்கன், திருமதி ரூபவதி ஆகிய மூவரால்தான் இந்நூல் வெளிவந்தது என்று கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், வல்வெட்டித்துறை நடராஜ கோட்டத்திலிலிருந்து 22-7-1967 அன்று எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பிரதிவாசித்துதவிய பாங்கையும் குறிப்பிடுகிறார். 1980இல் வெளியான என் 'புல்வெளி' என்ற கவிதைத் தொகுதியை வாசித்துக் கலாநிதி க.கைலாசபதி எழுதிய விளக்கமான கடிதத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். தஞ்சையில் ஒருமுறை பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குக்குப்பின்(அப்பொழுது சிவத்தம்பி அவர்களுக்கு ஐம்பது வயதுதானிருக்கும் என்ற நினைவு) 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற கா.சிவத்தம்பியின் கட்டுரைத் தொகுப்பு, சிதம்பரநாதனின் புத்தகத்தை மட்டுமே அறிந்திருந்த மாணவர்களுக்கும் தமிழ் முதுகலை மாணவர்களுக்கும் புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டியது என்று குறிப்பிட்டேன். சிரித்துக் கொண்டார். சிவத்தம்பியின் புத்தகத்தின் சிறப்புக்கு அதன் 160 பக்கங்களிலிருந்து ஒரு சிறிய பகுதியை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்:
“ஜெயகாந்தனது இலக்கிய எதிர்காலம் எப்படியிருப்பினும், அவர் சாதித்தவை அவருக்குச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் அளிக்கின்றன. சிறுகதைகள், சனரஞ்சகமாக அமையமாட்டா என்ற கருத்து தவறானது என்பதனைச் சாதனையால் நிறுவியவர் ஜெயகாந்தன்.
சிறுகதையின் உருவ அமைதியில் ஜெயகாந்தன் கதைகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. பொருளமைதியில் முக்கியமான ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியது. அதுவே அவர் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.
கற்பித மனோரம்மிய இலக்கிய நோக்கு ஆட்சி புரிந்தவிடங்களில் யதார்த்த இலக்கிய நோக்கினைப் புகுத்தி அந்நோக்கின் சிறப்பை நன்கு உணர்த்தியமையே அப்பண்பாகும்.”(6)
**
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளைக் குறித்து டாக்டர் இரா.தண்டாயுதம் எழுதிய புத்தகம் இவ்விரண்டில் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச் சிறுகதை வரலாறு குறித்துச் சிந்தித்தும் ஆராய்ந்து எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் க.நா.சு., தொ.மு.சி.ரகுநாதன், சிட்டி சிவபாதசுந்தரம் டொமினிக் ஜீவா,டாக்டர்கள் மா.இராமலிங்கம், இரா.மோகன், எம்.வேதசகாய குமார் முதலியவர்கள் அவர்கள்.
அடிக்குறிப்புகள்
* ஜீவா என்று டாக்டர் அ. சிதம்பரநாதன் கட்டுரையில் குறிப்பிடப்படுபவர் 'உயிரோவியம்' என்ற நாவலால் புகழ் பெற்ற நாரண துரைக்கண்ணன் ஆவார்.
(1) டாக்டர் மா.இராசமாணிக்கனார், இருபதாம் மொழியில் தமிழ் உரைநடை வளர்ச்சி, பக்.243-244.
(2) மேலது, ப.252.
(3) கா.திரவியம், தேசியம் வளர்த்த தமிழ், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை,1974, பக்.200-201.
(4) மேலது, ப.203.
(5) டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். பதிப்பாசிரியர்: பேராசிரியர் பிளோரம்மாள், ம.செ.இரபிசிங். பிலோமினா பதிப்பகம், 5/25, புதுத்தெரு, சென்னை-600004. 1977. ப.வி. இந்தப் புத்தகத்தின் கருத்துகளே தொடர்ந்து வருவதால் அடிக்குறிப்புகளிடவில்லை. மொத்தப் பக்கங்களே 22தான்.
(6)டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்ப் புத்தகாலயம், 58, டி.பி.கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மூன்றாம் பதிப்பு அக்டோபர், 1980. ப.139
சிறுகதை இலக்கணம்
வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு அணுவின் சலனமோ சிறுகதையாக இடமுண்டு.
சிறுகதைக்கு இலக்கணமோ, வரைமுறையோ, பண்போ கிடையாது என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சிறுகதைக்கு, பண்போ தனி இலக்கணமோ இல்லை என்று கூறிவிட முடியாது என்போரும் உண்டு. சிறுகதைக்கென இரண்டு நூற்றாண்டு காலப் புதிய மரபு தோன்றிவிட்டது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறுகதையின் பொதுவான தன்மைகள் குறித்து ஆய்வுக் கருத்துகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் சிறுகதைக்கெனச் சில வரைமுறைகளைச் சுட்டிக் காண்கின்றனர்.
இலக்கணம்
1) சிறுகதை என்றால் அளவில் சிறியதாய் இருக்க வேண்டும்.
2) தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.
3) சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.
4) அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.
5) விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரக் கூடாது.
6) குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
7) பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.
8) சிறுகதை அளவிற் சிறியதாய், முழுமை பெற்று இருக்க வேண்டும்.
9) சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.
10) நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதலில் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது.
ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி – இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.
குறிஞ்சிக் கலி யில் (51) கபிலர் பாடிய கள்வன் மகன் என்ற செய்யுள் கருத்தை இங்கு எடுத்துக் கொள்வோம். தாகத்திற்கு நீர் பருக வரும் வழிப்போக்கன் போல, தலைவன், தலைவி வீட்டிற்கு வருகிறான். தாகத்தைத் தணிக்க, நீர் ஊற்றும்போது தலைவன் அவள் கையைப் பற்றுகிறான். தலைவி கூச்சலிடுகின்றாள். இதைக் கேட்ட தாய் பதறி ஓடிவருவதைக் கண்டு, தலைவனைக் காட்டிக் கொடுக்காமல் 'அவனுக்கு விக்கிக் கொண்டு விட்டது' என்று தலைவி ஒரு பொய்யைக் கூறுகிறாள். கள்வன் மகன் என்று அவனை அன்பு பொங்க ஏசுகிறாள்.
இவ்வளவும் ஒரே நொடிப் பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. குறிப்பிட்ட ஒரே இடம். மூன்றே பாத்திரங்கள். ஒரே உணர்ச்சி. சின்னஞ் சிறு நிகழ்வுகள் மூலம் விரியும் கதை. எவ்வளவு சொற்செட்டு!, எவ்வளவு உயிராற்றல்! அந்தச் செய்யுள் எந்த நீதியையும் புகட்டவில்லை. ஆனால் இயற்கையான உணர்ச்சிக்கும், பெண்மையின் பண்புக்கும் இடையேயான போராட்டத்தைச் சித்திரித்து வெற்றி கண்டுள்ளது. படைப்பாளரின் இத்திறன் இலக்கணத்தை விட முக்கியமானதாகவே கருத இடமளிக்கிறது.
1.2.1 சிறுகதையின் தொடக்கம்
சிறுகதையின் தொடக்கம் குதிரைப் பந்தயம் போன்று விறுவிறுப்பாய் அமைதல் வேண்டும். சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான தொடக்கம் இன்றியமையாததாகிறது. அப்போது தான் அதன் தொடர்ச்சி நெகிழ்ச்சியின்றி அமையும். படிப்போரின் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உதவும். சிறுகதையின் தொடக்கம் வாசகர்களை ஈர்த்து, படிக்கத் தூண்டுவதாய் இருத்தல் வேண்டும். சிறுகதையில் ஒவ்வொரு வரியும் முக்கியம். அதில் அநாவசியத்திற்கு இடமில்லை என்பதிலிருந்து தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டியதன் அவசியத்தை உணரலாம்.
சிறுகதையைத் தொடங்கி எழுதுவது என்பது யானை உருவத்தைச் செதுக்குவதற்கு ஒப்பாகும். தேக்கு மரத்துண்டில் யானையைச் செதுக்க விரும்புகின்றவன், முதலில் யானையின் உருவத்தை மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு செதுக்கலையும் யானையின் உருவத்தை நோக்கிச் செலுத்த வேண்டும். அவ்வாறு இன்றி, சிலையைச் செதுக்குபவன் நடுவில் ஒரு குதிரையை மனதில் நினைத்தான் என்றால் சிலையானது யானையின் முகமும், குதிரையின் உடலுமாய் மாறி அமைந்துவிடவும் கூடும். அதாவது யாத்திரை அல்லது குனை ஆக உருவாகிவிடக் கூடும். இவ்வளவிலே சிறுகதையின் தொடக்கமும் சிறப்பாக அமையப்பெறவில்லை, எனில் அதன் தொடர்நிகழ்வுகளை ஒருமுகப்படுத்துதல் என்பது இயலாமல் போய்விடும்.
குறிப்பிட்ட அளவில் சிறுகதைத் தொடக்கத்தின் முக்கியத்துவம் அறியப்படுகிறது.
1.2.2 சிறுகதையின் முடிவு
சிறுகதையின் தொடக்கத்தைப் போன்றே முடிவும் முக்கியத்துவம் பெற வேண்டும். சிறுகதையின் முடிவு இறுதிவரை படிப்போரின் கவனத்தைக் கவரக் கூடியதாய் இருக்க வேண்டும். சிறுகதையில் முடிவு கூறப்படவில்லை எனில் அந்த மனத்தில் நிலைத்து நிற்காது. கதையின் முடிவு உரைக்கப்படல் அல்லது சிந்திக்கச் செய்தல் ஆகியவற்றின் மூலமே படைப்பாளரின் ஆற்றல் உணரப்படும். ஆகவே சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான முடிவு அவசியம் என்பது உணரப்படுகிறது.
சிறுகதையின் முடிவு நன்மையானதாகவும் அன்றித் தீமையானதாகவும் அமையலாம். சில நேரங்களில் கதையின் முடிவு முரண்பாடானதாகவும் அமைவது உண்டு. முரண்பாடான முடிவுகள் படிப்பவர்களைச் சிந்திக்க வைப்பதும் உண்டு. சிறந்த முடிவினைக் கொண்ட சிறுகதையே மனத்தில் நிலைக்கும். சிறுகதையின் சிறந்த முடிவு சமூகப்பயன் விளைவிக்கக் கூடியது. சிலவேளைகளில் சிறுகதைகளின் முடிவுகள் தலைப்புகளாக அமைந்த நிலையில் அவை சிறப்புப் பெறுவதும் உண்டு. இத்தகைய சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கிய உடனேயே அந்தக் கதையின் போக்கையும், அதன் முடிவையும் அறிந்து கொள்ள இயலும்.
முடிவுகளைத் தலைப்புகளாகக் கொண்ட சிறுகதைகள் சிலவற்றின் பெயர்களை இங்குக் காணலாம். நா.பார்த்தசாரதியின் ஊமைப் பேச்சு, ஜெயகாந்தனின் வேலை கொடுத்தவன் , புதுமைப்பித்தனின் திண்ணைப் பேர்வழி, சோமுவின் மங்களம் போன்ற கதைகளை இதற்கு. உதாரணங்களாகக் கூறலாம்.
1.2.3 சிறுகதையின் உச்சநிலை
உச்சநிலை என்பது, வாசகர்கள் எதிர்பாராத வகையில் அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சியில் கதையை முடிக்கும். சிறுகதைகளில் உச்சநிலைக்கு இடமில்லை எனில் அது சாதாரணக் கதையாகவே கருத இடமளிக்கும். படைப்பிலக்கிய நிலைக்குத் தகுதியுடையதாகாது. உச்சநிலையே படைப்பாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது. படைப்பாளியின் மறைமுகக் கருத்துகள் சில நேரங்களில் உச்ச நிலைக்கு இடமளிப்பதும் உண்டு.
சிறுகதைகள், படிப்பவரிடத்தே அடுத்தடுத்து என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அதன்பின் உச்சநிலைக்கு உரியதாகிப் பயன் விளைவிக்கவேண்டும். உச்சநிலையை எதிர்பார்த்துப் படிக்குமளவில்தான் சிறுகதை அமைத்துத் தொய்வின்றி அமையும். சிறுகதையின் உச்சநிலை முடிவினையும், பயனையும் வழங்க வல்லதாய் அமைகிறது. கதை நிகழ்ச்சி, கதைமாந்தர் மூலமாகவே உச்சநிலை உயிர் பெறுகிறது. படைப்பாளர் உச்சநிலையினை அமைத்துக் கொடுப்பதன் மூலமே சிறுகதையின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
கல்கி அவர்களின் கேதாரியின் தாயார் சிறுகதையில் உச்சநிலை சிறப்பிடம் பெறுகிறது. இச்சிறுகதையின் கதைத்தலைவன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடித்து முக்காடு இடும் பிராமணச் சமூக வழக்கத்தை முற்றிலும் வெறுப்பவனாக, அதை மாற்ற முயல்பவனாகக் காட்டப்படுகிறான். மேலும் அவன் அம்மாவுக்கு நேர்ந்த அந்நிலையை எண்ணி வருந்தி உயிரை விடுபவனாகவும் காட்டப்படுகிறான். கதை முழுவதிலும் இத்தகைய அவனது மனநிலையையே விவரிக்கும் படைப்பாளர், அவன் இறந்த பிறகு அவன் மனைவிக்கும் அதே நிலை ஏற்படுவதை உச்சக்கட்டமாக அமைத்து மனத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார்.
1.2.4 சிறுகதையின் அமைப்பு
சிறுகதை விறுவிறுப்பாய்த் தொடங்கி, அந்தத் தொடர்ச்சியில் நெகிழ்ச்சி இல்லாமல் இயங்கி, உச்சநிலைக்குச் சென்று முடிவுவரை படிப்பவரின் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். படிப்பவர்களைச் சோர்வடையச் செய்யக் கூடாது. கதை உணர்ச்சியோட்டம் உடையதாய் அமைதல் வேண்டும். கதையமைப்பானது சங்கிலித்தொடர் போன்று கதைமாந்தர்களிடையே பின்னிப் பிணைந்து காணப்பட வேண்டும். கதையின் கருப்பொருள் எளிமையானதாய் இருக்க வேண்டும்.
சிறுகதை மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் அமைதல் வேண்டும். சமுதாயத் தேவையை நிறைவு செய்யும் பாங்கிலும் அமைதல் வேண்டும். நல்ல சிறுகதைக்கு, தொடக்கமும், முடிவும் இன்றியமையாதவையாகின்றன. சிறுகதையைப் படிக்கும் போது அடுத்து என்ன நிகழும் என்ற உணர்ச்சியும், எதிர்பார்ப்பும் ஏற்படுத்தும் வண்ணம் கதையமைப்பு இருத்தல் வேண்டும். படைப்பாளின் கதையில் இந்த உணர்ச்சிதான் இடம்பெறவேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உணர்ச்சிகள்
1) காதல்
2) வீரம்
3) சோகம்
4) நகை
5) வியப்பு
6) வெறுப்பு
7) அச்சம்
8) சாந்தம்
9) கருணை
இந்த ஒன்பது வகையான உணர்ச்சிகளுள் ஒன்று, பலவோ கலந்து சிறுகதைகளை உருவாக்க வேண்டும். சிறந்த சிறுகதைகள் படைப்பாளரின் மொழி, நடை, கற்பனை, வருணனை ஆகியவற்றைக் கொண்டு அமையும்.
சிறுகதைகள் அரை மணியிலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாயிருக்க வேண்டும். சிறுகதையின் நீளம் என்பது வரையறுக்கப்படாத ஒன்று. ஒரு பக்கத்தில் முடிந்த சிறுகதைகளும் உண்டு. அறுபது பக்கம் வரை வளர்ந்த சிறுகதைகளும் உண்டு. பொதுவாக, கதையின் கருத்துக்குப் பொருந்துகின்ற நீளம்தான் உண்மையான நீளம். இதைப் படைப்பாளர்தான் தீர்மானிக்க வேண்டும். சிறுகதைகள் எளிய நடையில் அமைதல் வேண்டும்.
க. நா. சுப்ரமணியம்
சி றுகதை என்றால் என்ன?
உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும், கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது – உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும், கதை என்றால் என்ன என்ற கேள்விகள் தோன்றுகின்றன.
இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து, கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில், ஈசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில், எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டது. கொண்டவைதான்.
நாவல், நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான்.
சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன? எப்படியிருக்க வேண்டும்?
ஓ. ஹென்றியின் கதைகளில் பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஓடி வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளில் அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு, ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப்பாற்பட்டதாக செகாவின் சிறுகதைகள் நுண்ணிய விவரங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக வந்து விழா, முடிவுறாத கோர்வையாக, நடக்காத ஒரு காரியமாக நின்றுவிடும். முடிவுறாத கோர்வையும், நடக்காத காரியமும், செயல்படாத செய்கையும் சிறுகதைதான்; சம்பவக் கோவையும் திருப்பமும் சிறுகதைதான்; உருட்டித் திரட்டி வைத்த மெருகேற்றிய அந்த முத்து உருவமும் சிறுகதைதான்.
மூன்றும் சிறுகதைதான் என்று சொல்கிறபோது, மூன்று சிறுகதைப் பாணிக்கும் பொதுவான ஒரு அம்சம் தெரிகிறது. அதுதான் மூன்று பேருடைய கதைகளிலும் ஓடுகிற ஒற்றைச்சரடு. அது ஒரு பாவமோ, ஒரு கோபமோ, ஒரு ஆத்திரமோ, ஒரு செயலோ, ஒரு குணாதிசயமோ ஒன்றாகப் பரவி ஓடிக் கடைசிவரை நீடித்திருக்கிறது சிறுகதையிலே என்று சொல்லலாம். அந்த ஒரு சரடுதான் மையக் கரு சிறுகதைக்கு.
அப்படியானால் மையக் கருத்து, சரடு ஒன்று காவியத்துக்குக் கிடையாதா, நாடகத்துக்குக் கிடையாதா, நாவலுக்குக் கிடையாதா என்று கேட்கலாம். உண்டு. ஆனால் நாவலாசிரியனும், காவியாசிரியனும் அந்தச் சரடைவிட்டு வெகு தூரம் நகர்ந்து உல்லாசமாகப் போய்த் திரிந்து வரலாம். சிறுகதசிரியன் அப்படிச் செய்யமுடியாது. பாவ ஒருமைப்பாடும், ஆழமும் போய்விடும் அந்த மையக் கருத்தைவிட்டு அவன் நகர்ந்துவிட்டால்.
கதையில் ஒன்று – ஒரே ஒன்று – ஒரு கருத்து, ஒரு பாவம் அல்லது ஒரு குணசித்திரம்தான் – மையக்கருத்தாக இருக்கவேண்டும். அதைவிட்டுச் சிறுகதசிரியன் அதிகம் விலகக்கூடாது என்று சொன்னேன். அத்தோடு சேர்த்துக்கொள்ளவேண்டியது இதையும் – கதை என்பது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு மனோபாவமாக இருக்கலாம். ஒரு உள்ளப்போராட்டமாக இருக்கலாம். அது ஏதாவது ஒன்றாக இருக்கும் வரையில், சிறுகதை பிறக்கும். இரண்டாகவோ அதிகமாகவோ இருந்தால் சிறுகதை பிறக்காது – வேறு என்ன பிறந்தாலும்.
இலக்கியத்தில் எந்தத் துறையிலானாலும் சரி, ஒரு உருவம் ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி நகர்கிறது என்பது வெளிப்படை. அந்த முடிவு சாதாரணமாக நாவலில், காவியத்தில், நாடகத்தில் முதலில் வெளியாகாமல் இருக்கலாம். ஆனால் சிறுகதையில் முதல் வாக்கியத்திலேயே, சில சமயம் முதல் வார்த்தையிலேயே வெளியாகிவிடும். பின்னர் வருகிற ஒவ்வொரு வாக்கியமும் வார்த்தையும் இந்த முடிவை நோக்கி நகரும் காரியத்தைத் தெள்ளத் தெளியச் செய்யவேண்டும். அப்போதுதான் நல்ல சிறுகதை தோன்றுகிறது.
ஆரம்பம், நடுவு, முடிவு முதலியனவும், இடைப்பாகங்களும் சரியாகப் பொருந்தியுள்ள சிறுகதைகளை நல்ல உருவம் பெற்றவையாக நாம் போற்றுகிறோம். ஆனால் சில ஆசிரியர்களின் சிறுகதைகளில், முக்கியமாக செகாவ், சரோயன் போன்றவர்களின் கதைகளில் – ஆரம்பம், நடு, முடிவு தெரியாதபடி செய்திருக்கிறார்கள். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறவர்கள் மாதிரிச் செய்து சட்டென்று முடித்துவிடுவார்கள்.
செகாவின் கதைகள் முடிந்துவிட்ட பிறகும்கூட முடிவு கண்டுவிட்ட மாதிரித் தோன்றாதபடி, தொடர்ந்து நடக்கிற மாதிரிச் செய்யப்படுகின்றன.
இந்த ஒரு விஷயத்திலேனும் ரவீந்திரநாத் தாகூர் இந்தியச் சிறுகதைக்கு ஒரு இந்திய உருவம் தந்திருக்கிறார் என்று சொல்லவேண்டும். ஆதிமத்யாந்தரகிதமான சர்வேசுவரனை நினைவூட்டும் – அற்புதமாக நினைவூட்டும் பல சிறுகதைகளைத் தாகுர் எழுதியிருக்கிறார்.
இந்த ஆரம்பம் – நடு – முடிவற்ற தன்மை ஏதோ அநாயாசமாகப் பிரக்ஞையில்லாமல் வந்துவிடுகிற விஷயம் அல்ல. செகாவிலும் சரி, தாகுரிலும் சரி – கலையை மறைக்கும் அந்தக் கலை எளிமையுடன், முழுப் பிரக்ஞையுடன் வருவதுதான்.
மனிதனுடைய நடத்தையும் லட்சியமும் ஏணியின் கால்கள்போல என்றும் ஒன்று சேராத இரட்டைக் காலில்தான் நடக்கிறது என்பதை அறிவுறுத்துகிற புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்' தமிழுக்குத் தனியாக வந்து வாய்த்த ஒரு சிறுகதை உருவம். ராமனானால் என்ன? அகல்யையானால் என்ன? இருவரும் மனிதர்கள்தானே! இதே அளவில் 'அன்றிரவு' சிறப்பாக வெற்றி கண்ட கதை புதுமைப்பித்தன் இலக்கியத்திலே. ஆனால் அது பழசை ஒட்டி எழுந்தது. 'சாப விமோசனம்' புதுமையை ஒட்டி எழுந்தது.
உருவம் என்று காணமுடியாததை மெளனி, தமிழ்ச் சிறுகதையில் சிறப்பாகவே செய்திருக்கிறார். ந. பிச்சமூர்த்தி அவர்களும், லேசாகப் பல விஷயங்களைச் சொல்லி, முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை எட்டி விந்தை புரிபவர். மற்றப்படி கு. ப. ராஜகோபாலன், சிதம்பர சுப்பிரமணியன் முதலியவர்கள் சாதாரணமாகத் தெரிந்துகொள்ளக்கூடிய உருவங்களையே கையாண்டவர்கள். சி. சு. செல்லப்பா கதைக்கு உருவத்தைவிடச் சூழ்நிலையே முக்கியமென்று எண்ணுவது அவர் சிறுகதைகளிலிருந்து தெரியும்.
சிறுகதையில் மற்றொரு அம்சமான நீளம் என்பது உருவத்தில் ஒரு பகுதியாகவே, இவ்வளவுக்கும் பிறகு, தோன்றும். எடுத்துக்கொண்ட ஒருமையைக் கலைக்காமல், எவ்வளவு தூரம் ஓடிக் கதை தானாக நிற்கிறதோ அதுவே அதன் நீளம். ஒரு பக்கத்திலிருந்து இருநூறு பக்கங்கள் வரையிலும் சிறுகதைகள் இருக்கலாம்; மேலும் இருக்கலாம்தான். ஆழ்ந்து ஒருமைப்பட்ட சூழ்நிலையும் விவரணங்களும், பகைப்புலமும் சிலவிதக் கதைகளுக்குத் தேவைப்படுகின்றன. ஹெமிங்வே பல சம்பவங்களைச் சொல்லி ஒரு நிகழ்ச்சியில், கதையின் ஒருமைப்பாடு கெடாமல் முடிப்பார். இதெல்லாம் ஆசிரியருடைய சாமர்த்தியத்தைப் பற்றி சொல்லவேண்டுமே ஒழிய தனியாகச் சொல்லித் தெரியாது.
எல்லா இலக்கியத் துறைகளுக்கும் போலவே, சிறுகதைக்கும் தனி இலக்கணம் சொல்ல முடியாது. எந்த இலக்கிய சிருஷ்டியுமே இலக்கணத்தை மீறிய ஒரு செய்கை.
ஒவ்வொரு சிறுகதையும் ஒரு தனி உலகம் – அது ஒரு தனி கலை உலகம். அதிலே சாதிகள் என்றோ, கட்டுப்பாடு என்றோ ஒன்றும் கிடையாது. ஒன்று. ஒன்றுதான் முக்கியம் என்று செய்யப்படுவதுதான் சிறுகதை.
(சிறு குறிப்புகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.)
காஷ்யபன்
வசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனை “பொறி”தான் சிறுகதை.அது எவ்வளவு சிறியதாக இருக்கலாம்? பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல்,அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம் என்கிறார் ஏ.சி.ஜி. வெல்ஸ்.
அதன் உள்ளடக்கம் , கட்டுமானம் பற்றி எதுவும் இல்லை.ஆனால் இன்று அது பல்வேறு வடிவங்களில், பல்வேறு உள்ளடக்கத்துடன் நமக்குக் கிடைகிறது.ஆங்கில சிறு கதைகளின் தந்தை என்று போற்றப்படும் எட்கர் ஆலன் போ இது பற்றி அதிகம் கூறியிருக்கிறார்.அவரது கருத்தை ஒட்டி சாமர் செட் மாம் கூறும்போது” ஒரே சம்பவத்தைச்சொல்லும் கற்பனை” என்கிறார்.” அது துடிப்போடு, மின்னலைப் போல மனதோடு இணைய வேண்டும் “என்கிறார். “ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சீராகக் கொடுபோட்டது போல் செல்லவேண்டும்” என்றும் குறிபிடுகிறார்.
சிறுகதை பாத்திரத்தைச்சுற்றி வராது.மாறாக கதையின் நோக்கத்தைச்சுற்றிவரும்.இது கவிதையைப் போன்று உணர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.மனதை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். வேண்டும்.. உபதேசம் செய்யக்கூடாது.
இலக்கியப் பண்டிதர்கள் சிறுகதையை இலக்கியத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கத் தயங்கவே செய்கிறார்கள்.நூற்றுக்கணக்கான உலக மொழிகளில் எழுத்தாளர்கள்,நல்லது பொல்லாததுமாக லட்சக்கணக்கில் எழுதித் தள்ளியுள்ளார்கள். இவற்றைப் பார்த்து ஆராய்ந்து சொல்லமுடியாத சிரமமும் இதில் அடங்கியுள்ளது.ஆக்ஸ்வர்டு ஆங்கில வரலாற்று நூல் இது பற்றி, இந்த வடிவம் பற்றி குறிப்பிடவே இல்லை.மற்ற மொழிகளிலும் இது தான் நிலை..
மனிதம் பற்றி ஆழமான சித்தரிப்பு இருந்தால் மட்டுமேஅங்கீகாரம் கிடைக்கும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.எழுத்தாளன் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது. என்பதை உணர்ந்து புரிந்து கொண்டால் தான் இத்தகைய ஆக்கபூர்வமான,வாழ்க்கைக்கு நெருக்கமான படைப்புகளை உருவாக்க முடியுமென்ற உணர்வுகளை துல்லியமாக,சரியாக,.மெச்சத்தகுந்தவகையில்வெளிபடுத்தும் திறமை கொண்டவனே ஆக்கபூர்வமான எழுத்தாளன்.சிதறிய கண்ணாடித்துண்டுகளில் தெரியும் பிம்பங்களாக அவை இருக்கக் கூடாது.
சிறுகதை எழுத்தாளர்கள் பல தரப்பட்டவர்கள். அவர்கள் இலக்கியம் படித்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அவர்கள் எழுதுகிறார்கள். மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க எழுது கிறார்கள்.உணர்வுகளின்அழுத்தத்திலிருந்துவிடுபடஎழுதுகிறார்கள்.தேசியம்,சீர்திருத்தம்,கலாசாரம்,பண்பாடு,தத்துவம்,உளவியல்,நவீனத்துவம்,பின்நவீனத்துவம் என்று அவர்களுக்குத் தெரிந்ததை தெளிவாகவு ம், தெளிவின்றியும் எழுதுகிறார்கள். இவர்களுக்கு போதமூட்டி கற்று கொடுப்பது சிரமமான காரியமல்ல.
மேலை நாட்டு இலக்கியங்கள், குறிப்பாக,பிரஞ்சு,ரஷ்ய, ஆங்கில இலக்கியங்களை முன் மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகளில் நவீன சிறுகதைவடிவம் உருவாயிற்று.
- 1854 ஆம் ஆண்டு மராத்திய மொழியில் தான் முதன் முதலாக நவீன சிறுகதை வெளிவந்ததாக இலக்கிய வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.விஷ்ணு கண் ஸ்யாம் என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் எழுதிய இந்த சிறுகதையின் தலைப்பு தெரியவில்லை.
- 1872ம் ஆண்டு வங்க மொழியில் பூர்ண சந்திர சட்டர்ஜி என்பவர் “மதுமதி” என்கிற சிறுகதையை எழுதியுள்ளார்.
- 1891ம் ஆண்டு குஞ்சு ராமன் நாயனார் என்ற மலையாள எழுத்தாளர் “பழக்க தோஷங்கள்” என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.
- 1900ம் ஆண்டு “என் அத்தை” என்ற சிறுகதையை பன்சே மங்கேஷ்ராவ் என்பவர் கன்னட மொழியில் எழுதியுள்ளார்.
( ஆதாரம் : Compaaritive Indian Literature vol 111, Kerala Sahithya Academy)
1854ம் ஆண்டுக்கு முன் நம் நாட்டில் சிறுகதைகள் என்ற வடிவம் இருந்ததில்லையா?
இருந்தது என்பதுதான் உண்மை.கதை சொல்வது என்பது மிகவும் பழமையான கலையாகும்.உலகத்திலேயே மிக அதிகமான கதைகளை கைவசம் இந்தியாதான் வைத்திருக்கிறது. பாரதி,தாகூர் போன்றவர்கள் அவற்றை நவீனப்படுத்த முயற்சித்தார்கள்..
எழுத்தாளர்: காஷ்யபன்
'தீக்கதிர்' என்ற முன்னணி தமிழ் நாளிதழிலும், 'செம்மலர்' என்ற மாத இதழிலும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக துணை ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழில் மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தலா ஒன்று, தமிழில் ஒரு நாவல் மற்றும் ஒரு நாடகம் ஆகியவற்றை வெளியிட்டார். பெரும்பாலான நேரத்தை வாசிப்பதிலும், ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலும் செலவிடுகிறார்.