சனி, 27 ஆகஸ்ட், 2016

Ponnar sankar Udukkaiyadi kathai part 4

Ponnar sankar Udukkaiyadi kathai part 3

Ponnar sankar Udukkaiyadi kathai part 2

Ponnar sankar Udukkaiyadi kathai part 1

பொன்னர் சங்கர் வீர வரலாறு .... Ponnar Sankar veera varalaru...

சனி, 18 ஏப்ரல், 2015

சிறுதானியங்கள் என்றால் என்னங்க?

மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம். சிறுதானியங்கள் பற்றிய விவரம் தெரிந்துகொள்வோம்.
சிறுதானியங்கள் என்றால் என்ன?
உணவு தானியங்களில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மானாவாரிப் பயிர்களாக, வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களிலும், மிகக் குறைவான தண்ணீரிலேயே வளரக்கூடியவை. மேலும் சிறுதானியங்கள், மிகவும் பழங்காலத்திலிருந்தே, மனிதர்கள் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்றாகவும், தானிய வகைகளில் முதன்மையானதாகவும் உள்ளது.

சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். நிலத்தில் விதையைத் தூவியதிலிருந்து, குறைந்தது 65 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும். இது அவற்றின் மற்றொரு தனிச்சிறப்பு. இத்தன்மை மக்கள் தொகை அதிகமுள்ள நிலப்பகுதிகளில் பயனளிக்கக் கூடியது. சிறுதானியங்களை, சரியான முறையில் சேமித்து வைக்கும் பொழுது, அவை இரண்டு அல்லது அதற்கு அதிகமான வருடங்களும் கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஏன் சிறுதானியங்களை உண்ண வேண்டும்?
  • ஊட்டச்சத்துக்கள்: இவை அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. குளுட்டன் தன்மை அற்றவை. அமிலத்தன்மை அற்றவை. இவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. இவற்றில், வெறும் கலோரிகளை மட்டும் அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை சத்து மட்டும் அல்லாது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. பட்டைதீட்டப்பட்ட அரிசியைப் போல் அல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் சீராக வெளியிடுவதால், சர்க்கரை நோய் உண்டாவதை குறைக்கிறது. அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதைக் காட்டிலும், பத்து மடங்கு அதிக அளவு கால்சியம் ராகியில் உள்ளது. மேலும் தகவல்களுக்கு அட்டவணையைப் பார்க்கவும்.
  • சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு: சாகுபடிக்கு மிக குறைந்த நீராதாரமே போதுமானது. வறண்ட நிலங்களில் வளரக்கூடியது. விளைவிக்க எவ்விதமான பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் தேவையில்லை. எனவே மண்ணும், உண்ணும் உடலும் மலடாவதில்லை. உற்பத்தி செலவு மற்றும் மின்சார உபயோகம் குறையும். அத்தகைய மானாவாரிப் பகுதிகளில் வாழும் விவசாயிகள், நீர் மற்றும் இரசாயனங்களை அதிகம் உறிஞ்சக்கூடிய  நெல் மற்றும் கோதுமை பயிர்களை, மிகவும் கஷ்டப்பட்டு விளைவிக்க வேண்டிய தேவை இருக்காது. பலவிதமான சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மண்ணின் பன்மயத்தன்மை (Bio-diversity) பாதுகாக்கப்படும். அரிசி, கோதுமை போன்ற பயிர்களை வலுக்கட்டாயமாக எல்லாவிதமான நிலத்திலும், காலநிலையிலும் பயிரிடத் தேவையில்லை.

சிறுதானியத்தை எப்படி சமைப்பது?
வழக்கமாக அரிசி, கோதுமையைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவுப் பதார்த்தங்களைப் போன்றே, வரகு, குதிரைவாலி, பனிவரகு, சாமை, திணை, கேழ்வரகு, கம்பு மற்றும் சோளம் தானியங்களிலும், உமியை நீக்கி விட்டு, அனைத்து விதமான பதார்த்தங்களையும் சமைக்கலாம். வெறும் சாதமாக சமைத்து, சாம்பார், குழம்பு, ரசம், மோர் ஊற்றியும் சாப்பிடலாம்.

சிறுதானியத்தை சமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?
சிறுதானியங்களை சாதமாக சமைக்கும் முன்னர், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நீரில் ஊற வைக்க வேண்டும். சாதம் நன்கு குழைவாக வேண்டும் எனில், குக்கரில் சமைக்கவும். உதிரியாக வேண்டுமெனில், பாத்திரத்தில் சமைக்கவும். வரகு, குதிரைவாலி, பனிவரகு, சாமை, திணை முதலிய தானியங்களை சமைக்க, அவற்றின் அளவைப் போன்று 2 1/4 முதல் 2 1/2 மடங்கு நீர் தேவைப்படும். குக்கரில் சமைக்க 8 நிமிடங்களும், பாத்திரம் எனில் 10 நிமிடங்களும் ஆகும்.

கம்பு மற்றும் சோளத்தில் சாதம் செய்ய, குறைந்த பட்சம் 15 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். சமைப்பதற்கு 3 முதல் 4 மடங்கு வரை தண்ணீர் தேவைப்படும். சாதம் குக்கரில் வேக 20 முதல் 25 நிமிடங்கள் ஆகும். பாத்திரம் எனில், 40 அல்லது 45 நிமிடங்கள் ஆகும்.
மற்ற உணவு வகைகளான, ரொட்டி, இடியாப்பம், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை, சிறுதானிய மாவில் தயாரிப்பதனால், சமைக்க அதிக நேரம் தேவைப்படாது.

சிறுதானியங்களை யார் சாப்பிடலாம்?
சிறுதானியங்களை குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நமது வீடுகளில் குழந்தைக்கு 6 மாதம் ஆன பிறகு, பொதுவாக கேழ்வரகு மாவில் இனிப்புக் கூழ் செய்து சாப்பிடக் கொடுப்பது வழக்கம். அந்த வழக்கம் குழந்தை சற்று வளர்ந்ததும், தாய்மார்களால் நிறுத்தப்பட்டு விடுகிறது. அதேபோன்று, வயதான பின்பு மருத்துவர்களின் அறிவுரையின் படி, சர்க்கரை நோயாளிகள் மட்டும், (விருப்பமில்லாமல் / வேறு வழியில்லாமல் / வேண்டாவெறுப்பாக) அவ்வப்போது உண்ணக்கூடிய ஒரு தானியமாக கேழ்வரகு மாறிவிட்டது. மற்ற அனைத்து சிறுதானியங்களையும் நாம் முற்றிலும் ஒதுக்கி (கிட்டத்தட்ட மறந்து) விட்டோம். சிறுதானியங்கள் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பறவைகளுக்கான உணவாக மட்டும் ஆகி விட்டது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில், அவர்களின் உணவுக் கலாச்சாரத்தில் ஒன்றாகக் கலந்து விட்டமையால், இன்றைக்கும் அவர்கள் கேழ்வரகு, கம்பு மற்றும் சோள தானியங்களை மட்டும் அன்றாட உணவில் சேர்த்து வருகின்றனர்.  இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். மேலேக் குறிப்பிட்டது போல, சிறுதானியங்கள் எல்லா வயதினரும், எல்லா பருவகால நிலைகளிலும் உண்ணக் கூடியதே. அவரவர் வசிக்கும் நிலப்பரப்பில் விளையக்கூடிய தானியங்களை உண்பதே சிறந்தது. நம்மில் பலருக்கும் கம்பு உடலுக்கு குளிர்ச்சி, கேழ்வரகு சூடு என்கின்ற கருத்து உள்ளது. எனவே நமது பகுதிகளில் கம்பை வெயில் காலத்திலும், கேழ்வரகை குளிர் காலத்திலும் மட்டுமே அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. ஆனால் வட மாநிலங்களில், கம்பு உடலுக்கு சூடு தரும் என்று குளிர் காலங்களில் பயன்படுத்துகின்றனர். 

இயற்கையானது, ஒவ்வொரு பருவ நிலைக்கும், மனிதர்களின் உடல் நலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வகையிலான பயிர்களை மட்டுமே, அவரவர் வாழும் பகுதிகளில் விளைவிக்கின்றது. எனவே இந்தப் பொருள் குளிர்ச்சி, அந்தப் பொருள் சூடு என்று எந்த தானியத்தையும், காய்கறிகளையும், பழங்களையும் ஒதுக்கி வைக்க வேண்டியதில்லை. ஒருவேளை உங்களில் சிலருக்கு, அந்தந்த பருவகாலத்தில் விளையும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடல் நலத்தில் மாற்றம் ஏற்படலாம். இதற்கான காரணத்தை இயற்கை வாழ்வியல் கருத்துக்களின் மூலம் அறிந்து கொள்ளவும்.

குழந்தைகளை எப்படி சிறுதானிய உணவுகளுக்குப் பழக்கப்படுத்துவது?
குழந்தைளுக்கு சிறுதானிய உணவு வகைகளை அறிமுகப்படுத்த வேண்டுமெனில், முதலில் வீட்டில் உள்ள பெரியவர்கள் அதனை சுவைத்துப் பழக வேண்டும். தற்சமயம் வீடுகளில், பெரும்பாலானத் தின்பண்டங்கள் அரிசி அல்லது மைதா மாவுகளைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அதனால் நாம் அனைவரும் வெள்ளை நிற உணவுகளையே சாப்பிட்டுப் பழகி விட்டோம். ஆனால் சிறுதானியங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணங்களில் இருப்பதால், நம் மனங்களால் அவற்றை உடனடியாக உண்பதற்கான ஒரு பொருளாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆதலால் சிறுதானிய உணவுக்கு மாற விரும்புபவர்கள், ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது ஒருநாளில் ஏதாவது ஒருவேளை உணவில் மட்டும் என்று சிறுதானியத்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடத் துவங்குவது நல்லது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு முதலில் சிறுதானிய தின்பண்டங்களை சாப்பிடக் கொடுப்பது நல்லது. அவர்களுக்கு அந்தச் சுவை பிடித்தமானதாகி விட்டால், பின்னர் கலவை சாதங்களை அறிமுகப்படுத்தலாம். குழந்தைகள் ஒருமுறை சாப்பிட்டு விட்டு, அவர்களுக்குப் பிடிக்காமல் போனால், அதற்காக முற்றிலுமாக சிறுதானியத்தை நிறுத்தி விடுவது நன்மை தராது. குறைந்த பட்சம் பெரியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகளும் சிறிது சிறிதாக அவற்றின் மீது விருப்பம் கொள்வார்கள். சிறுதானியங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்கள் மட்டுமன்றி தனித்தன்மையான சுவையும் கொண்டவை. ஒருமுறை இவற்றை சுவைத்துப் பார்த்த பின்னர் வெள்ளை நிற அரிசி மற்றும் மைதாவினால் ஆன உணவுப் பண்டங்களின் மீது நமக்குள்ளப் பற்றுத் தானாகவே குறைந்து விடும்.

சிறுதானியங்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகுமா?
சிறுதானியங்களில், பட்டை தீட்டப்பட்ட அரிசி மற்றும் கோதுமையைக் காட்டிலும், அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இவற்றை உண்டபின், மிக சீரான அளவில் இரத்தத்தில் சர்க்கரையை வெளியிடுகின்றன. குறைந்த அளவே அமிலத் தன்மை உள்ளதால், உடனடியாக பசிக்காது. எனவே சாதாரணமாக வெள்ளை அரிசி சாதம் சாப்பிடும் அளவைக் காட்டிலும், அதில் பாதி அளவு சிறுதானிய உணவு உண்டாலே போதுமானது. அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடியத் தேவை இல்லை. இந்த அடிப்படையான கருத்தைத் தவறாகப் புரிந்து கொள்வதனால், நம்மில் பலர் சிறுதானியங்கள் செரிமானம் ஆவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதாக நம்புகின்றோம்.

சிறுதானியங்கள் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன?
தற்பொழுதுக் கடைகளில் விற்கப்படும் சிறுதானியங்களின் (கம்பு, சோளம் மற்றும் கேழ்வரகு தவிர) விலை, பட்டைதீட்டப்பட்ட அரிசி, கோதுமை இவற்றின் விலைகளைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருப்பது உண்மை. இதற்கு முக்கியமான காரணம், பசுமைப் புரட்சி விவசாயிகளிடத்தில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். இந்தியா தனது பாரம்பரிய உணவு தானியங்களை விளைவிப்பதை நிறுத்தி விட்டு, ஒட்டு ரக நெல், கோதுமை உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. மக்கள் அனைவரும், கிட்டத்தட்ட சிறுதானியங்களை மறந்து விட்ட நிலையில், தற்பொழுது அவற்றின் சிறப்புகளை மீண்டும் உணர ஆரம்பித்துள்ளனர். நமது பாரம்பரிய தானியங்கள் வெகு சில விவசாயிகளால் மட்டும் விளைவிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி குறைவாக இருப்பதினால், அவற்றின் விலை சற்று அதிகமாக உள்ளது. நுகர்வோர்களாகிய நாம் நம் அன்றாட உணவில் அதிக அளவில் சிறுதானியங்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டால், அவற்றின் உற்பத்தி அதிகரிக்கும். அவற்றின் விலையும் தானாகவே குறைந்து விடும்.

அரிசி உணவில் பாதி அளவு சிறுதானிய உணவு உண்பதே போதுமானது. அவ்வகையில் பார்க்கப் போனால், 2 கிலோ பட்டை தீட்டப்பட்ட அரிசியின் விலைக்கு, 1 கிலோ சத்தும் சுவையும் மிகுந்த சிறுதானியத்தை வாங்கினால் போதும். மேலும் பட்டை தீட்டப்பட்ட அரிசியை உண்பதனால் ஏற்படும் சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற விளைவுகளுக்கு செய்யப்படும் மருத்துவ செலவு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. எனவே சிறுதானியங்களின் விலை தற்சமயம் அதிகமாக இருந்தாலும், அவற்றால் நமக்கு ஏற்படும் பலன்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உண்மையில் நாம் பணத்தை மிச்சப்படுத்தவே செய்கிறோம்.

பாரம்பரிய அரிசி வகைகள்:
சிறுதானியங்களைப் போலவே, அதிக சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த, நம் அனைவராலும் மறக்கடிக்கப்பட்ட தானியங்கள் தான் நமது பாரம்பரிய அரிசி வகைகள். இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இப்பொழுது அழிக்கப்பட்டு விட்டன.

சிறு தானியங்களும், சத்துக்களும்

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.சிறுதானியங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கீழ்கண்ட தானியங்களுக்குரிய அதாவது சிறுதானியங்களுக்குரிய பொதுவான தமிழ்ப்பெயர் புன்செய் தானியங்கள் ஆகும்.
  • கம்பு (Pearl Millet)
  • தினை (Italian Millet or Foxtail Millet)
- செந்தினை
- கருந்தினை
- பைந்தினை
- பெருந்தினை
- சிறுதினை
  • கேழ்வரகு/ராகி (Finger Millet)
  • வரகு (Kodo Millet)
  • பனிவரகு (Proso Millet)
  • குதிரைவாலி (Barnyard Millet)
  • சாமை (Little Millet)
- பெருஞ்சாமை
- செஞ்சாமை
  • சோளம் (Great Millet or Sorghum)
- செஞ்சோளம்
- கருஞ்சோளம் ( இருங்கு சோளம் )
- வெள்ளைச்சோளம்
  • காடைக்கண்ணி (ஓட்ஸ்/புல்லரிசி)
               சிறுதானியங்கள்  பெருங்குடலின் செயல்பாட்டைச் சீராக்குகின்றன. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. உடல் சுறுசுறுப்பிற்குக் காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன. சிறுதானியங்களில் அதிக அளவில் காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது. சிறுதானியங்கள் ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கின் றன. சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின் பி3) ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. அன்றாடம் சிறுதானியங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு 2ம் வகை (இன்சுலின் சார்ந்த) சர்க்கரை நோய் வருவதில்லை. சிறுதானியங்களை அதிக அளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றது.

சிறுதானிய பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப் பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது. அதிக நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. உடல் பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும்போது, உடல் எடை சீராக குறைகின்றது. எலும்பு வளர்ச்சிக்கும், சராசரி ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.

இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும்,சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்ளில் செய்த உணவினை உட்கொள்ளும் போது உடல் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.

----------------------------------------------------------------------
(1)சோளம்
              இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 10.4கி ,
கொழுப்பு சத்து : 1.9கி,
தாது உப்புகள்:1.6கி ,
நார்ச்சத்து : 1.6கி ,
மாவுச்சத்து:72.6கி ,
கால்சியம் :25மிகி ,
பாஸ்பரஸ் :222 மிகி ,
இரும்புச்சத்து: 4.1 மிகி

மருத்துவ பயன்கள்:
1.நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
2.சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
3.கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது.
4.ரத்த சோகை நோயை குணபடுத்தும்
5.சோளம் சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை ஆகும்.

சமைக்கப்படும் உணவுகள் :
சோள சோறு , சோள தோசை, சோள அல்வா , சோள வடை , சோள பாயசம் , சோள அடை .

-------------------------------------------------------------------------------------------------------------

(2)கம்பு
           இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி யில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 11.6கி ,
கொழுப்பு சத்து : 5.0கி,
தாது உப்புகள்:2.3கி ,
நார்ச்சத்து : 1.2கி ,
மாவுச்சத்து:67.5கி ,
கால்சியம் :42மிகி ,
பாஸ்பரஸ் :296 மிகி ,
இரும்புச்சத்து: 8 மிகி

மருத்துவ பயன்கள்:
1. ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
2. உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும்
3. வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும்.
4. தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும்.
5. உடல் வலிமையை அதிகமாக்கும்.
6. வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.

சமைக்கப்படும் உணவுகள் :
கம்பு களி , கம்பு சோறு , கம்பு தோசை, கம்பங்கூள் ,கம்பு ரொட்டி ,கம்பு புட்டு , கம்பு பிஸ்கட்.

----------------------------------------------------------------------------------------------------------
(3)ராகி
        ராகி  ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தியாவில் விளையும் உணவு தானியத்தில் 25 சதவீதம் ராகி விளைகிறது. அரிசி மற்றும் கோதுமையைவிட ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும்.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 7.3கி ,
கொழுப்பு சத்து : 1.3கி,
தாது உப்புகள்:2.7கி ,
நார்ச்சத்து : 3.6கி ,
மாவுச்சத்து:72கி ,
கால்சியம் :344மிகி ,
பாஸ்பரஸ் :283 மிகி ,
இரும்புச்சத்து: 3.9 மிகி

மருத்துவ பயன்கள்:
ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
• கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
• தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
• லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.
• இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
• உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
• குடலுக்கு வலிமை அளிக்கும்.
• உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.

சமைக்கப்படும் உணவுகள் :
ராகி களி , ராகி மால்ட் , ராகி தோசை , ராகி ரொட்டி

----------------------------------------------------------------------------------------------
(4)குதிரைவாலி
        சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி பயிர். இந்தியாவில்  மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா,பீகார் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் திருச்சி, நெல்லை, விருதுநகர், மதுரை, கடலூர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 6.2கி ,
கொழுப்பு சத்து : 2.2கி,
தாது உப்புகள்:4.4கி ,
நார்ச்சத்து : 9.8கி ,
மாவுச்சத்து:65.5கி ,
கால்சியம் :11மிகி ,
பாஸ்பரஸ் :280 மிகி

மருத்துவ பயன்கள்:
1.உடலை சீராக வைக்க உதவுகிறது.
2.சர்க்கரை அளவினை குறைக்க வல்லது
3.ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
4.இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும்,
5.நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

சமைக்கப்படும் உணவுகள் :
குதிரை வாலி முறுக்கு , குதிரை வாலி சோறு , குதிரை வாலி தோசை , குதிரை வாலி உப்புமா , குதிரை வாலி கிச்சடி
----------------------------------------------------------------------------------------------------

(5)சாமை
        புன்செய்த்  தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. சாமையில் அதிக புரத சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. சாமை உணவு விரைவில் பசிக்காது. பொதுவாக கொழுப்பு சத்து குறைந்த உணவாகும். ட்ரைகிளசைரஸ் குறைவான அளவில் உள்ளது. விட்டமின் பி3 அதிகம் கொண்ட உணவாகும்.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 7.7கி ,
கொழுப்பு சத்து : 4.7கி,
தாது உப்புகள்:1.5கி ,
நார்ச்சத்து : 7.6கி ,
மாவுச்சத்து:67கி ,
கால்சியம் :17மிகி ,
பாஸ்பரஸ் :220 மிகி ,
இரும்புச்சத்து: 9.3 மிகி

மருத்துவக் குணங்கள்
1. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.
2. இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.
3. வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.
4. நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்

சமைக்கப்படும் உணவுகள் :
சாமை முறுக்கு , சாமை சோறு , சாமை இடியாப்பம் ,சாமை புட்டு , சாமை கிச்சடி 
-----------------------------------------------------------------------------------------------------

(6)தினை
           தினை உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் 2வது தானிய வகையாகும் . பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். தினை என்றவுடன் தமிழ் கடவுள் முருகப் பெருமான் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் படித்த கதைகள் நம் நினைவுக்கு வரும். இதிலிருந்து, புராண காலம் தொட்டே தினையை பயன்படுத்தி வந்தது நமக்கு புரியும்.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 12.3கி ,
கொழுப்பு சத்து : 4.3கி,
தாது உப்புகள்:3.3கி ,
நார்ச்சத்து : 8கி ,
மாவுச்சத்து:60.9கி ,
கால்சியம் :31மிகி ,
பாஸ்பரஸ் :290 மிகி ,
இரும்புச்சத்து: 2.8 மிகி

மருத்துவ பயன்கள்:
1. இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.

சமைக்கப்படும் உணவுகள் :
1. தினை மாவு 2. தினை முறுக்கு 3. தினை அல்வா 4. தினை புட்டு 5.தினை பொங்கல் 6. தினை லட்டு 
-----------------------------------------------------------------------------------------------------------


(7)வரகு
            வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.வரகு தானியத்தை கும்பாபிஷேகத்தின்போது கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் உள்ளது.வீடுகளில் கூரை மேய்வதற்கு வரகுத்தாளை பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 8.3கி ,
கொழுப்பு சத்து : 1.4கி,
தாது உப்புகள்:2.6கி ,
நார்ச்சத்து : 9.0கி ,
மாவுச்சத்து:65.9கி ,
கால்சியம் :27மிகி ,
பாஸ்பரஸ் :188 மிகி ,
இரும்புச்சத்து: 0.5 மிகி

மருத்துவ பயன்கள்:
1.சர்க்கரை அளவை குறைக்கிறது.
2. மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
3. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
4. நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
5. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.


சமைக்கப்படும் உணவுகள் :
வரகு முறுக்கு , வரகு சோறு , வரகு பிரியாணி ,வரகு தோசை , வரகு பணியாரம் 
-----------------------------------------------------------------------------------------------------

(8)பனிவரகு
               பனிவரகு (Panicum Miliaceum) ஒரு புன் செய் தானியம். இதில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.பனி வரகு மாவிற்குப் பதிலாக அடுமனைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஊட்ட சத்துகள்:(100 gm ),
புரத சத்து : 12.5கி ,
கொழுப்பு சத்து : 1.1கி,
தாது உப்புகள்:1.9கி ,
நார்ச்சத்து : 2.2கி ,
மாவுச்சத்து:70.4கி ,
கால்சியம் :14மிகி ,
பாஸ்பரஸ் :206 மிகி ,
இரும்புச்சத்து: 0.8 மிகி

மருத்துவக் குணங்கள்
1. சர்க்கரை அளவினை குறைக்கிறது .

சமைக்கப்படும் உணவுகள் :
பனிவரகு பாயசம் ,பனிவரகு பால் பணியாரம் , பனிவரகு கூட்டா சோறு